மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாக காவல் துறை மா அதிபர் தெரிவித்தார். எனினும், தற்போது இந்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதையும் அவர் உறுதிப்படுத்தினார். இன்று (22) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் அவர் இந்த விடயங்களை விளக்கினார்.
அதேவேளை, நீதிமன்ற வளாகங்களுக்குள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இலங்கை காவல் துறையால் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். நீதிமன்றங்களின் வெளியே காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றங்களின் உள்வழியிலான பாதுகாப்புக்கு காவல்துறை பொறுப்பேற்கவில்லை என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.
தற்போது, நீதிமன்ற வளாகங்களுக்குள் பாதுகாப்பு நடவடிக்கைகளை தனியார் பாதுகாப்பு நிறுவனம் மேற்கொள்கிறது. இந்த விடயத்தில் தேவையான தீர்வுகளை ஏற்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், சில குற்றச் செயல்கள் இன்னும் வெளிநாடுகளில் இருந்து வழிநடத்தப்பட்டுவருகின்றன. எனினும், இவ்வகையான குற்றக் குழுக்களுக்கு அரசியல் பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை எனவும் அவர் வலியுறுத்தினார் முன்பு, குற்றவாளிகள் அரசியல் ஆதரவின் கீழ் தமது நடவடிக்கைகளை விரிவுபடுத்தியிருந்தனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
2023 முதல் குற்றச் செயல்களில் அதிகரிப்பு காணப்படுவதாகவும், குற்றச் செயல்கள் வெளிநாடுகளிலிருந்தும், சிறைகளிலிருந்தும் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இவ்வாறான குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்காக சிறைச்சாலைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், சில குற்றவாளிகள் விமான மார்க்கத்தினூடாக மட்டுமன்றி, கடல் வழியாகவும் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சிக்கின்றனர். இவற்றை தடுக்கும் நோக்கில், கடற்படை மற்றும் கடற்கரை காவல் படை (Coast Guard) தமது நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்துள்ளதாகவும், குற்றவாளிகளை கைது செய்ய தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.
கருத்தை பதிவிட