யாழ்ப்பாணம் – 27 மே 2025: வடமாகாண கல்விப் பணிப்பாளரால் மேற்கொள்ளப்பட்ட 2024/2025ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் இடமாற்றங்கள், உரிய அனுமதியின்றி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இடமாற்ற சபை உறுப்பினர் சோ. காண்டீபராசா தெரிவித்துள்ளார்.
2025 மே 26ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருமாறு அறிவிக்கப்பட்ட இவ்விடமாற்ற நடவடிக்கைகள், இடமாற்ற சபையின் அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும், இது நடைமுறை தவறுகளுக்கிடையே பல்வேறு சர்ச்சைகளுக்கு தளமளிக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக நேற்று (26.5.2025) ஊடகங்களுக்கான அறிக்கையொன்றை வெளியிட்ட காண்டீபராசா, ஆசிரியர்களின் மேன்முறையீடுகள் பரிசீலிக்கப்பட்டு இடமாற்றங்கள் சீராக்கப்படும் வரை, வலயக் கல்விப் பணிப்பாளர்கள் கால அவகாசங்களை விதிப்பதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை ஆசிரியர் சங்கமும், இந்த இடமாற்ற நடவடிக்கைகள் தொடர்பாக கடும் எதிர்ப்பு தெரிவித்து, வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தின் மூலம் பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டியுள்ளது.
“எமது முன்மொழிவுகள் பார்வையிடப்படாமலும், இடமாற்ற சபையின் ஆலோசனைக்குப் பிறகும் மேன்முறையீட்டு சபையின் பரிந்துரைமுமின்றி மேற்கொள்ளப்பட்ட இவ்விடமாற்றங்கள் முறையற்றதாகும்” என சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், 2025 மே 30க்குள் “சான்றிதழ் வழங்கக்கூடாது” என வலயக் கல்விப் பணிப்பாளர் அதிபர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஆசிரியர்களின் மேன்முறையீடுகளை ஏற்க மறுத்திருப்பது தொழில்சங்கங்களின் கண்டனத்துக்கு இடமளித்துள்ளது.
“வலயக் கல்வி அதிகாரிகளின் வக்கிர செயல்முறைகள் தொடருமானால், தொழிற்சங்க நடவடிக்கைகள் தவிர்க்க முடியாதவையாக மாறும்” என இலங்கை ஆசிரியர் சங்கம் கடுமையாக எச்சரித்துள்ளது.
மூலம்: ஆசிரியர் சங்க ஊடகவியல் அறிக்கை, 26.5.2025
கருத்தை பதிவிட