கடந்த மே மாதம் 30ஆம் திகதி வெனடாச்சி பகுதியில் தங்களது தந்தையுடன் காரில் சென்ற சிறுமிகள் பைடின் (9), எவலின் (8), மற்றும் ஒலிவியா டெக்கர் (5) ஆகியோர் அதையடுத்து காணாமல் போன நிலையிலே, ஜூன் 2ஆம் திகதி லீவன்வர்த் பகுதியில் உள்ள முகாமொன்றில் சடலமாகவே மீட்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, சிறுமிகள் வீடு திரும்பாததை தொடர்ந்து அவர்களது தாயார் வித்த்னி டெக்கர் காணாமல் போன குறித்துப் பொலிஸாரிடம் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்திருந்தார்.
பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, டிராவிஸ் டெக்கர் செலுத்தியதாக நம்பப்படும் வெள்ளை நிற 2017 ஆம் ஆண்டுக்கான ஜிஎம்சி சியெரா வாகனம் முகாமொன்றில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வாகனத்திலிருந்தே இரத்தக்கறைகள் மற்றும் சில உடைமைகள் மீட்கப்பட்டுள்ளன.
முக்கியமாக, குறித்த வாகனத்திலிருந்து சுமார் 75–100 யார்ட்கள் தொலைவில், மூன்று சிறுமிகளும் கைகளில் ஜிப் டை மற்றும் தலைவிரிப்பில் பிளாஸ்டிக் பைகள் கட்டப்பட்ட நிலையிலே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
சிறுமிகளின் தந்தையான டிராவிஸ் டெக்கர் (32) தற்போதைய நிலையில் தலைமறைவாகவே இருக்கின்றார். முன்னாள் இராணுவ வீரரான இவர், மனநிலை பாதிப்புக்குள்ளானவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அவர் ஆயுதமொன்றுடன் இருக்கக்கூடிய சாத்தியமுள்ளதினால், பொது மக்கள் அவரை அணுக வேண்டாம் என அமெரிக்க அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அவரை கைது செய்ய $20,000 பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவரை தொடர்பாகத் தகவல் உள்ளவர்கள் உடனடியாக 911 என்ற எண் அல்லது செலான் கவுண்டி ஷெரிப் திணைக்களத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இந்தச் சம்பவம் அமெரிக்காவில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், சிறுமிகள் கல்வி பயிலும் பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு உளவள ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதேவேளை, தாயார் வித்த்னி டெக்கர் மற்றும் குடும்பத்துக்கு ஆதரவாக தொடங்கப்பட்டுள்ள நன்கொடைப்பணித் திட்டம் வழியாக ஏற்கனவே $380,000 க்கும் மேற்பட்ட தொகை திரட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கருத்தை பதிவிட