கொழும்பு முதன்மை நீதவான் தனுஜா லக்மலி அவர்களால், ஐக்கிய தேசிய சுயதொழில் வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் மற்றும் முன்னாள் சஜப உறுப்பினர் பிரதீப் சார்ல்ஸ் உள்ளிட்டவர்களுக்கு எதிராக, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமானைப் பழிசுமத்தும் வகையில் ஆன்லைனில் வெளியிடப்பட்ட கருத்துகள் தொடர்பில் இன்று (13) தற்காலிக தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இத்தடையுத்தரவு, 2024 ஆம் ஆண்டின் இலக்கம் 9 ஆன “ஆன்லைன் பாதுகாப்பு சட்டம்” இன் பிரிவு 24ன் கீழ் முஜிபுர் ரஹுமான் MP அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் பிரதீப் சார்ல்ஸ், யூடியூப் சேனல் நடத்துநர்களான நதீஷா அமரநாத் மற்றும் துஷாரா செவ்வந்தி ஆகியோரும் பதிலளிப்பாளர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
முறைப்பாளரின் சட்டத்தரணி லக்ஷன் டயஸ், நீதிமன்றத்தில் விளக்கியதாவது, முதலாவது பதிலளிப்பாளர் தொடர்ச்சியாக ஊடகங்கள் வாயிலாக முஜிபுர் ரஹுமானைப் பற்றிய அவதூறான மற்றும் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய கருத்துகளை பரப்பிவந்ததாகவும், இதற்கமைய முன்னர் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கொன்றில் நீதிமன்ற தீர்ப்பு முஜிபுர் ரஹுமானுக்கே அனுகூலமாக வழங்கப்பட்டிருந்ததையும் தெரிவித்தார்.
எனினும், அந்தத் தீர்ப்பிற்குப் பிறகும், முதலாவது பதிலளிப்பாளர் மறுபடியும் தடைசெய்யப்பட்ட கருத்துகளை வெளியிட்டு வருவதால், இதனைத் தவிர்க்க நீதிமன்றத்திடம் தடையுத்தரவு கோரப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், மற்ற பதிலளிப்பாளர்கள் யூடியூப் மற்றும் சமூக ஊடகங்களின் வாயிலாக இத்தகைய உள்ளடக்கங்களை மீண்டும் இணையத்தில் பதிவேற்றம் செய்வதை தடுக்கும் வகையிலும் உத்தரவு வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை பரிசீலித்த நீதவான், பதிலளிப்பாளர்கள் அனைவரும் வரும் 2025 ஜூன் 27ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டதோடு, தற்காலிகமாக அவ்வகை கருத்துக்களை மேலும் வெளியிடுவதைத் தடைசெய்து உத்தரவு பிறப்பித்தார்.
கருத்தை பதிவிட