உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தின் ஹைபத்பூர் கிராமத்தில் நடந்த ஒரு சம்பவம் தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் புகழ் பெறும் நோக்கத்துடன் சாகசம் செய்ய முயன்ற ஒரு விவசாயியின் செயல், அவரை உயிருக்கு ஆபத்தான நிலைக்குத் தள்ளியுள்ளது.
இந்த கிராமத்தைச் சேர்ந்த ஜிதேந்திர குமார் (வயது 50) என்ற விவசாயி, பாம்பு கண்டுபிடிப்பு மற்றும் மீட்பில் அனுபவம் வாய்ந்தவர் என்று கூறப்படுகிறார். கடந்த வெள்ளிக்கிழமை, அப்பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றுக்குள் விஷப்பாம்பு நுழைந்ததாக தகவல் வந்ததும், வழக்கம்போல் ஜிதேந்திரகுமாரை அழைத்தனர். சம்பவ இடத்துக்குச் சென்று பாம்பை வெற்றிகரமாக பிடித்த அவர், அதை காட்டில் விடாமல், ஊரவர்களின் முன் ஒரு “ரீல்ஸ் சாகசம்” செய்யத் தீர்மானித்தார்.
அப்போது அவர் போதையில் இருந்ததுடன், ஒரு கையில் சிகரெட் பிடித்தபடி, மறுகையில் பாம்பின் தலைப்பகுதியை தன் பிடியில் வைத்திருந்தார். அதற்கும் மேலாக, தனது கழுத்தில் பாம்பை வைத்தபடி, அதற்கு முத்தம் கொடுக்க முயன்றார். இதையெல்லாம் அங்கிருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்தனர்.
துரதிருஷ்டவசமாக, அவர் பாம்புக்குள் நாக்கை நீட்டியவுடன், பாம்பு திடீரென அவரது நாக்கை கடித்தது. உடனடியாக அவர் அதிர்ச்சியில் பாம்பை கீழே வீசியதும், பாம்பு அருகிலிருந்த புதர்களுக்குள் ஓடிவிட்டது.
பாம்பு கடித்த உடனே, ஜிதேந்திரகுமாரின் உடல்நிலை மோசமடைந்ததால் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அதிலிருந்து மேல் சிகிச்சைக்காக மொரடாபாத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) உயிருக்கு போராடி வருகிறார்.
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது பெயருக்காக, “ரீல்ஸ்” மூலம் கவனம் ஈர்க்க நினைத்த ஒரு விவசாயியின் தோல்வியான முயற்சி, சமூகத்தில் சுய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
– தமிழ் தீ
கருத்தை பதிவிட