இலங்கை பொருளாதாரத்திற்கு நல்வாழ்வைத் தரக்கூடிய புதிய வர்த்தக வாய்ப்பு அமெரிக்காவிலிருந்து கிடைத்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி துணை அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடன் நடைபெற்ற முக்கியமான வர்த்தக கலந்துரையாடலின் போது, இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் 70% முதல் 80% வரையிலான பொருட்கள் மீது வரிகள் விதிக்காமல் ஏற்றுக்கொள்வதற்கான முன்மொழிவு அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டுள்ளதென அவர் கூறினார்.
இந்நிலையில், குறித்த வரிச்சலுகை தொடர்பான விவாதங்கள் இன்னும் முழுமையாக முடிவடைந்து விடவில்லை என்பதாலும், அதனை தற்போது பொது மக்களிடம் பகிர முடியாது என்றும், இது ஒரு ராஜதந்திர மற்றும் தொழில்நுட்பத் தன்மை கொண்ட பிரச்னையென்பதாலும், மிகுந்த கவனத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு வரும் இறக்குமதிப் பொருட்கள் மீதும் 0% வரிவிதிப்பு பெறும் வாய்ப்பு குறித்து பேசப்பட்டுள்ளதையும் அவர் தெரிவித்தார். தற்போது அந்த பொருட்கள் மீது 0% முதல் 20% வரையிலான வரிகள் விதிக்கப்பட்டு வருகின்றன. “நாம் வருடம் ஒன்றுக்கு சுமார் 300 மில்லியன் டொலர் அளவிலான பொருட்களையே அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்கிறோம். எனவே சில வரிகளைக் குறைத்தாலும், அரசுக்கு பெரிதாக வருவாய் இழப்பாக இருக்காது” என்றார்.
இதனிடையே, இந்த கலந்துரையாடல்களை தொடரும் வகையில் இலங்கை பிரதிநிதிகள் குழு ஒன்று நாளை (ஜூலை 18) அமெரிக்கா நோக்கி பயணம் செய்யவுள்ளதாகவும் துணை அமைச்சர் உறுதிப்படுத்தினார்.
அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசாங்கத்தின் சமீபத்திய அறிவிப்பின்படி, ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30% வரி விதிக்கப்படும் என்ற செய்தியும் இதனைத் தொடர்ந்து வெளியாகியுள்ளது.
மூலம்-அத தெறன.
கருத்தை பதிவிட