உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி அருகே, கூகுள் மேப்ஸ் வழிகாட்டுதலை பின்பற்றி சென்ற கார் முடியாமல் இருந்த பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் அதில் பயணம் செய்த மூவர் பலியாகினர்.
நோய்டாவிலிருந்து பரேலிக்குச் சென்று திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிதின் (30), அவரின் சகோதரர் அஜித் (30) மற்றும் அமித் (40) ஆகியோர் காரில் பயணித்துக் கொண்டிருந்தனர். அதிகாலை நேரத்தில், வெளிச்சமற்றதும் எச்சரிக்கை பலகைகள் இன்றியதும் ஆன முடியாத பாலத்தில் அவர்கள் சென்றடைந்த போது, சுமார் 15 மீற்றர் உயரத்தில் இருந்து ராமகங்கா ஆற்றுக்குள் வாகனம் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
அகலப்பூர் கிராம மக்கள் காலை வேளையில் சிதைந்த நிலையில் காரையும், அதனுள் சிக்கியிருந்த உடல்களையும் கண்டு உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். பின்னர், பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று மூவரின் உடல்களையும் மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக அனுப்பினர்.
பரித்பூர் பொலிஸ் அதிகாரி அசுதோஷ் சிவம் ஊடகங்களிடம் தெரிவித்ததாவது:
“2024 ஆம் ஆண்டின் வெள்ளப்பெருக்கின்போது பாலத்தின் முன்பகுதி இடிந்து விழுந்தது. ஆனால், அந்த மாற்றம் கூகுள் மேப்ஸ் தரவுகளில் புதுப்பிக்கப்படவில்லை. மேலும், அங்கு பாதுகாப்பு தடுப்போ, எச்சரிக்கை பலகையோ வைக்கப்படவில்லை” என்றார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக உயிரிழந்தோரின் உறவினர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் கடும் அதிருப்தியடைந்தனர். “பொது வேலைத்துறை அதிகாரிகளின் அலட்சியம் காரணமாகவே இந்த விபத்து நடந்துள்ளது. பொறுப்புக்கூற வேண்டியது அவசியம்” என அவர்கள் வலியுறுத்தினர்.
சம்பவத்தையடுத்து பொது வேலைத்துறையின் நான்கு பொறியாளர்களும், கூகுள் மேப்ஸ் நிறுவனத்தின் ஒருவரும் பொலிஸ் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
கூகுள் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,
“உயிரிழந்த குடும்பங்களுக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள். சம்பவம் தொடர்பான விசாரணைக்காக அதிகாரிகளுடன் இணைந்து நாங்கள் ஒத்துழைக்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்தை பதிவிட