மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலீஸ் பிரிவிற்குட்பட்ட பன்சேனை, வாதகல்மடு கிராமத்தில் இன்று அதிகாலை (20) இடம்பெற்ற துயரச் சம்பவத்தில், காட்டு யானை தாக்கியதில் நான்கு பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளார்.
விசாரணைகளின்படி, குறித்த பெண் தனது தகர வீடில் உறங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டுக்குள் சேமித்து வைக்கப்பட்டிருந்த நெல்லை உண்பதற்காக காட்டு யானை ஒன்று நுழைந்ததாக கூறப்படுகிறது. யானையை கண்டு பயந்த பெண் வீட்டை விட்டு வெளியே ஓடியபோது, அந்த யானை தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக பொலீஸ் தரப்புகள் தெரிவித்துள்ளன.
இவ்வாறு உயிரிழந்தவர் 58 வயதுடைய வைரமுத்து மலர் என்பவர் ஆவார். அவர் நான்கு பிள்ளைகளின் தாயாகும்.
சம்பவம் குறித்து வவுணதீவு பொலீஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வவுணதீவு பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வேண்டுகோளின் பேரில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் உடலை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டதுடன், பிரேதப் பரிசோதனைக்காக சடலம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இதனிடையே, மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் என். சத்தியானந்தயின் அனுமதிக்கமைய, காட்டு யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு 10 இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கப்படும் என பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.
இதன் ஆரம்பப் பணமாக, மரணமடைந்தவரின் மகனிடம் ஒரு இலட்சம் ரூபா காசேலையினை கிராம உத்தியோகத்தரும் அனர்த்த நிவாரண முகாமைத்துவ பிரிவு உத்தியோகத்தரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வழங்கியுள்ளனர்.
கருத்தை பதிவிட