ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகிலுள்ள நௌகாம் போலீஸ் நிலையத்தில் நேற்றிரவு ஏற்பட்ட கோர வெடிப்பு, இந்தியாவில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த துரதிஷ்டவசமான சம்பவத்தில் குறைந்தது 7 பேர் பலியாகி, 27 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
போலீஸ் நிலையத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பறிமுதல் செய்யப்பட்ட வெடிப்புப் பொருட்களை ஆய்வு செய்யும் போதே இந்த வெடிப்பு ஏற்பட்டதாக ஆரம்ப விசாரணைகள் தெரிவிக்கின்றன.
சம்பவம் நடந்த போது உள்ளே இருந்த காவல் அதிகாரிகள் தொழில்நுட்ப நிபுணர்கள், குண்டு நீக்கம் பிரிவு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்காலிக அறிக்கைகள் படி நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்ட அமோனியம் நைட்ரேட் உள்ளிட்ட மிக உயர்ந்த சக்தி கொண்ட வெடிப்புப் பொருள்கள். அவற்றை கையாளும் தருணத்தில் திடீரென வெடித்தது. வெடிப்பின் தாக்கம் மிகுந்ததால் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
வெடிப்பு ஒலி பல கிலோமீட்டர் தூரத்திலும் கேட்கப்பட்டதால் ஸ்ரீநகர் நகரில் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியும் அச்சமும் நிலவியது. விபத்துக்குப் பின்னர் பாதுகாப்பு படைகள் பகுதியைச் சூழ்ந்து அனைத்து வழிகளையும் மூடி விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய புலனாய்வுத் துறைகள் சம்பவ இடத்துக்கு வந்து குழிப்படிவங்கள், வெடிப்புப் பொருள்களின் தன்மை மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மூலத்தை ஆராய்ந்து வருகின்றன.
முதற்கட்ட தகவலின்படி இந்த வெடிப்புப் பொருள்கள் சமீபத்தில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய சந்தேகநபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டவையாகும்.
இது விபத்தா? சதி செயலா? – என்ற கேள்விக்கு இன்னும் பதில் இல்லை.
படுகாயமடைந்த 27 பேரும் ஸ்ரீநகர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலர் தீவிரநிலையிலுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் குறித்து மத்திய அரசு அவசரக் கூட்டம் கூட்டியிருக்கிறது. ஜம்மு-காஷ்மீரின் லெப்டினன்ட் கவர்னரும் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளும் விசாரணைக்கு விசேட குழுவை நியமித்துள்ளனர்.
கருத்தை பதிவிட