புவி முழுவதும் பிளாஸ்டிக் கழிவு ஒரு பெரும் சுற்றுச்சூழல் நெருக்கடியாக மாறி வரும் வேளையில், இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்கிப்பிங் ராக்ஸ் லேப் (Skipping Rocks Lab) எனும் இளைஞர் ஆராய்ச்சியாளர் குழு, ‘ஊஹோ!’ (Ooho!) எனப்படும் அற்புதமான மாற்று தீர்வை உருவாக்கியுள்ளது. இது பிளாஸ்டிக் பாட்டில்களின் தேவையை முற்றிலுமாக நீக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட சாப்பிடக்கூடிய நீர் புட்டி ஆகும்.
பசுமையான கண்டுபிடிப்பு:
இது இயற்கை கடல்வாழைச் சாற்றிலிருந்து உருவாக்கப்பட்ட ஜெல் போன்ற உறையைக் கொண்டது. அந்த உறையின் உள்ளே தூய்மையான குடிநீர் நிரம்பியுள்ளது. இதனைப் பயன்படுத்தி நீரை அருந்திய பின்னர், அந்த உறையை சாப்பிடவோ அல்லது குப்பையில் போட்டுவிட்டாலோ, அது 4 முதல் 6 வாரங்களில் இயற்கையாக அழிந்து விடும். எந்தவித பிளாஸ்டிக் கழிவும் உருவாகாது.
குறைந்த செலவு – அதிக தாக்கம்:
பல்வருட ஆராய்ச்சி முயற்சிகளின் பின், குழுவினர் தற்போது இதனை பிளாஸ்டிக் பாட்டில்களைவிடக் குறைந்த செலவில் தயாரிக்கக்கூடிய நிலைக்கு வந்துள்ளனர். இதனால் பெரிய அளவில் உற்பத்தி செய்து உலகளாவிய அளவில் பிளாஸ்டிக் மாசு குறைக்கலாம் என்பதே அவர்களின் நோக்கம்.
பொது நிகழ்ச்சிகளில் சோதனை:
2018 முதல் லண்டன் மாரத்தான், கிளாஸ்டன்பரி இசை விழா போன்ற முக்கிய நிகழ்ச்சிகளில் ‘ஊஹோ!’ புட்டிகள் சோதனைக்காக பயன்படுத்தப்பட்டன. மாரத்தானில் மட்டும் ஆண்டுதோறும் வழங்கப்படும் 7.5 இலட்சம் பாட்டில்களுக்கு மாற்றாக இது செயல்பட்டது.
கடல்வாழை அடிப்படையிலான புதிய தொழில்:
இக்குழுவில் சேர்ந்துள்ள வேதியியலாளர்கள், பொறியாளர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் வணிக நிபுணர்கள் இணைந்து, கடல்வாழையை அடிப்படையாகக் கொண்டு பிற சூழல் நட்பு பொருட்கள் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எதிர்காலத்தில், குளிர்பானங்கள், மதுபானங்கள், அழகு சாதனப் பொருட்கள் போன்றவற்றிற்கும் இதேபோன்ற இயற்கை உறைகள் உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.
சுற்றுச்சூழல் நேசிகளுக்கு நம்பிக்கை:
பிளாஸ்டிக் கழிவுகளால் மூழ்கிக் கொண்டிருக்கும் உலகிற்கு, “ஊஹோ!” ஒரு புதிய பசுமையான நம்பிக்கைச் சின்னம் ஆக விளங்குகிறது.
கருத்தை பதிவிட