கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இன்று (03) இலங்கை காவல்துறையின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவிற்கு (PNB) அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, மேற்குக் கடற்கரையில் நடைபெற்ற பெரும் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேகநபர்களை நவம்பர் 8ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த சந்தேகநபர்கள், 251.18 கிலோகிராம் ‘ஐஸ்’ (Crystal Methamphetamine) மற்றும் 85 கிலோகிராம் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட பலநாள் மீன்பிடி கப்பல் ஒன்றுடன் இணைத்து கைது செய்யப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் இன்று (03) கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், “சீதாதேவி” எனப்படும் மீன்பிடி கப்பலில் இருந்து பெரும் அளவில் போதைப்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக PNB அதிகாரிகள் தெரிவித்தனர். மேற்குக் கடற்பரப்பில் நடந்த விசேட கடற்படை நடவடிக்கையின் போது, இலங்கை கடற்படை அந்தக் கப்பலை மடக்கி பிடித்தது. பின்னர், அது திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது.
போலீசார் மேலும் தெரிவித்ததாவது, கைதான ஆறு நபர்களும் “போதைப்பொருள் இறக்குமதி மற்றும் கடத்தல் குற்றச்சாட்டின் கீழ்” கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், சந்தேகநபர்களை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரியபோது, நீதவான் அதனை ஏற்றுக்கொண்டு நவம்பர் 8ஆம் தேதி வரை காவல் அனுமதி வழங்கினார்.
மேலும், விசாரணையின் முன்னேற்ற அறிக்கையை அதே தேதியன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு PNB அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இலங்கை கடற்படை கடந்த நவம்பர் 2ஆம் தேதி மேற்குக் கடற்பரப்பில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பலநாள் மீன்பிடி கப்பலொன்றையும் அதில் இருந்த ஆறு நபர்களையும் கைப்பற்றியது. பின்னர் திக்கோவிட்ட துறைமுகத்தில் நடைபெற்ற விசேட சோதனையில், 250.18 கிலோகிராம் ‘ஐஸ்’ மற்றும் 85 கிலோகிராம் ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டதாக PNB உறுதிப்படுத்தியுள்ளது.
கருத்தை பதிவிட