இந்திய சினிமாவில் பல்வேறு மொழிப் படங்களில் கலைத் திறமையை வெளிப்படுத்தியுள்ள முன்னணி நடிகை மற்றும் பரதநாட்டியக் கலைஞர் டாக்டர் ஷோபனா அவர்கள் 2025ஆம் ஆண்டுக்கான இந்திய அரசின் உயரிய விருதான பத்மபூஷண் விருதினைப் பெற்றுள்ளார்.
இந்த விருது, மே 27, 2025 அன்று டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவன் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் இந்தியாவின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களால் வழங்கப்பட்டது.
ஷோபனா தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 230க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர் ஒரு புகழ்பெற்ற பரதநாட்டியக் கலைஞருமாவார். 2006ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் பெற்றிருந்தார்.
இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கான பட்டியல் ஜனவரி 25ஆம் திகதி குடியரசு தினத்தையொட்டி வெளியிடப்பட்டிருந்தது. அந்த பட்டியலில் இருந்து 19 பேருக்கு பத்மபூஷண் விருது வழங்க முடிவு செய்யப்பட்டது. அதில் ஷோபனாவின் பெயரும் இடம்பெற்றது.
அத்துடன், முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜெகதீஷ் சிங் கேஹர், தொழிலதிபர் நல்லி குப்புசாமி, நடிகர் ஆனந்த் நாக் மற்றும் ஆன்மீக வழிகாட்டி சாத்வி ரிதம்பரா ஆகியோருக்கும் பத்மபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருது நடிகை ஷோபனாவின் நீண்டகால கலைப்பணி மற்றும் சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்புக்கான அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.
கருத்தை பதிவிட